திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு ...
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை திருநாளில் தேய்பிறை சஷ்டியோ அல்லது தேய்பிறை அஷ்டமியோ அல்லது செவ்வாய் கிழமையோ வந்தால் இன்னும் சிறப்பு தான். சரி திருவாதிரை வரும் நாட்களை எப்படி கண்டு கொள்வது? அதற்கான விளக்கம் நமது வலைப்பூவில் திருவாதிரை கிரிவல நாட்கள் தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது. அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டியது தான்.வழிபாடு செய்ய நாம் முதலில் அசைவத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். அசைவத்தை நிரந்தரமாக நிறுத்திய பின்பே வழிபாடு செய்ய வேண்டும். அசைவத்தை நிறுத்தாமல் வழிபாடு செய்தால் நாய் வந்து கடிக்கும். சொர்ண பைரவரே அசைவத்தை நிறுத்த செய்வார். வழிபாடு செய்யும் முறை பின்வருமாறு:-
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ண பைரவர் சந்நிதியில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இயலவில்லையெனில் சொர்ண பைரவர் படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக் கொள்ளவும் அல்லது தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும்.
இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்யும் போது சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்ய வேண்டும். சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்த பின்பு “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ“ என்று 108 முறை செபம் செய்யவும். கடைசியாக சொர்ண பைரவர் போற்றி - 33 ஒரு முறை பாராயணம் செய்து முடிக்க வேண்டும். அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட வேண்டும்.
தொடர்ச்சியாக 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாவிடிலும் பரவாயில்லை. விட்டுவிட்டாவது 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்யும் நாளில் விரதம் இருப்பதும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தலும் மிக்க சிறப்பு. இவ்வாறு விரதம் இருத்தலும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தால் பலன்கள் வெகு விரைவில் தேடிவரும். இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்தால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-
- கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும்
- சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக வந்து சேரும்
- எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்
- எல்லா கடன்களும் தீரும்
- குன்றாத செல்வம் வந்து சேரும்
- வராத கடன்களும் வசூல் ஆகும்
- தொழில் பெரிய வளர்ச்சியை அடையும்
- நியாயமான பதவி உயர்வுகள் வந்து சேரும்
- நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்
- நியாயமான முறையில் பண வரவு உண்டாகும்
- வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்
- மறைமுக எதிரிகள் விலகுவர்
- செய்வினை கோளாறுகள் நீங்கும்
- அனைத்து வித செல்வங்களும் உண்டாகும்
- மிகுந்த புண்ணியம் சேரும்
- அட்டமா சித்துக்களும் உண்டாகும்
- நிரந்தரமான மனநிம்மதி கிட்டும்
- பிறவியில்லா பெருநிலை உண்டாகும்
- குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
- கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்
- சாபங்கள் அனைத்தும் நீங்கும்
- எல்லா வித நோய்களும் தீரும்
- நல்ல மக்கட் பேறு உண்டாகும்
- அட்ட லட்சுமிகளின் வாசம் இல்லங்களில் உண்டாகும்
- லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு இணையான செல்வம் உண்டாகும்
- வீட்டில் கால்நடைகளின் விருத்தி உண்டாகும்
- விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்
- சித்தர்களின் அருள் கிட்டும்
- எல்லா பிரச்சனைகளும் தீரும்
- வழக்குகள் அனைத்தும் தீரும்
- தவறான பழக்கங்கள் நீங்கும்
- அனைத்து கிரகங்களும் நன்மையே செய்யும்
- அனைத்து யோகங்களும் உண்டாகும்
இதில் விடுபட்ட அனைத்துவித கோரிக்கைகளும் நிறைவேறும். வேண்டப்பட்ட கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.
எல்லாம் அவன் செயல். எல்லாம் சொர்ண பைரவரின் அருள்.
|